உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.5 லட்சம் தங்கம் பறிமுதல்.. திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
உள்ளாடையில் கடத்தி வந்த ரூ.4.63 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் தனது உள்ளாடையில் ரூ.4.63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.
சுங்கத்துறை அதிகாரிகள் எவ்வளவுதான் கெடுபிடி சோதனைகள் நடத்தி பலவேரை கைது செய்து உள்ளே தள்ளினாலும், விமான நிலையங்களில் கடத்தல் என்பது இன்னும் குறைந்தபாடில்லை. எங்கிருந்துதான் கடத்தல்காரர்களுக்கு இவ்வளவு துணிச்சல் வருகிறதோ தெரியவில்லை. எனினும் அதிகாரிகள் தங்கள் சோதனை, விசாரணைகளை தீவிரப்படுத்தியே வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்றிரவு துபாயிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் வந்து இறங்கியது. அதிலிருந்து வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை அதிகாரிகள் வழக்கமான அடிப்படையில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, குறிப்பிட்டஒரு இளைஞர் மீது சந்தேகம் ஏற்படவும் அவரை தனி அறைக்கு அழைத்து நவீன ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்தனர்.
அப்போது அந்த இளைஞர் தனது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அது ரூ.4.63 லட்சம் மதிப்புள்ள 149 கிராம் தங்கம் என கூறப்படுகிறது. அவற்றினை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இளைஞரின் பெயர் ரகுமான் என்பதும், அவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. எனினும் இந்த தங்கம் கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? எங்கிருந்து யாருக்காக தங்கத்தை கடத்தி செல்லப்படுகிறது என்பன குறித்து தொடர் விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.