கொடநாடு கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளி சயானுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
கோத்தகிரி: கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சயானை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோத்தகிரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி, ஓம்பகதூர் என்ற காவலாளி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலத்த காயமடைந்தார். இந்நிலையில், பங்களாவுக்குள் புகுந்த மர்மநபர்கள் தங்கம், வைர நகைகள், பணம் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றார்கள். இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் மொத்தம் 11 பேருக்கு தொடர்பு உள்ளது என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அதில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான ஜெ.யின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டார். சயான் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து கோவையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் உடல் நலம் தேறியதால், கோத்தகிரி போலீசார் அவரை இன்று காலை கைது செய்துள்ளனர். இதையடுத்து கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சயானை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சயானிடம் போலீசார் விசாரணை நடத்தினால் கொடநாடு பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பற்றிய மர்மம் விலகும்.