கொட்டித்தீர்க்கும் பருவமழை – பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 15 கண்காணிப்பு பொறியாளர்கள் நியமனம்!
சென்னை: தமிழ்நாட்டில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சென்னையில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு 15 பொறியாளகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதைத் தொடர்ந்து சென்னையில் மழை நீரால் பொதுமக்களும், போக்குவரத்தும் பாதிக்கப்படாத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க குடிநீர் வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை ஏற்று குடிநீர் வாரியம் சென்னையில் உள்ள 15 பகுதிகளுக்கும் 15 கண்காணிப்பு பொறியாளர்களை உடனடியாக நியமித்து பணியை போர்க்கால அடிப்படையில் தொடங்கி உள்ளது.
சென்னையில் பருவ மழையின் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப்பகுதிகளில் மழை தண்ணீரால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி 24 மணிநேரமும் செயல்படும் மையம் ஒன்று குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்குள்ள 044-4567 4567 என்ற எண்ணில் மழைநீர் பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்கலாம். உடனடியாக புகார் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
மழை நீரை அப்புறப்படுத்துவதற்கான சிறப்பு டேங்கர் வாகனங்கள் மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்களும் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் அருகில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.