திருச்சி சுங்கத்துறையில் 15 கிலோ தங்கக்கட்டிகள் மாயம்: 3 அதிகாரிகள் கைது
திருச்சி: திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் 15 கிலோ தங்க கட்டிகள் மாயமானது தொடர்பாக 3 சுங்கத் துறை அதிகாரிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் காரில் கடத்தப்பட்ட 18.5 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தங்க கட்டிகள் திருச்சியில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் இருக்கும் பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டது. இது குறித்த வழக்கு திருவாரூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடத்தல் தங்கத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க கடந்த 18ஆம் தேதி பெட்டகத்தை திறந்து பார்த்தபோது அதில் வெறும் 3.5 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 15 கிலோ தங்க கட்டிகள் மாயமாகியிருந்தது. தங்க கட்டிகள் மாயமானது குறித்து சென்னையில் உள்ள சிபிஐ அதிகாரிகளிடம் சுங்கத்துறை மண்டல ஆணையர் ஜானி புகார் அளித்தார். இது குறித்த புகாரின்பேரில் சிபிஐ அதிகாரிகள் கடந்த இரண்டு வாரங்களாக திருச்சியில் ஆய்வு மேற்கொண்டனர்.
சுங்கத் துறை அலுவலக பாதுகாப்பு பெட்டகத்தை நிர்வகிக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னையிலிருந்து திருச்சி வந்து முகாமிட்டுள்ள சிபிஐ குழுவினர் சுங்கத்துறை அலுவலகம், விமான நிலையம் மற்றும் சந்தேகத்துக்கு இடமான சுங்கத்துறை அதிகாரிகள், பணியாளர்களின் வீடுகளிலும் ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாயமான தங்க கட்டிகளுடன் மேலும் 19 கிலோ தங்க கட்டிகளும், அவற்றுடன் ரூ. 17 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் (கரன்சிகள்) மாயமாகியுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்ததாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வழக்கம்போல் இதுகுறித்து எந்த பதிலையும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
மேலும், சம்பவம் தொடர்பாக மூன்று அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அவர்கள் மூன்று பேரிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.