கதிராமங்கலத்தில் பொதுமக்கள் - போலீஸ் இடையே மோதல்.. பெண்கள் 15 பேர் கைது
தஞ்சாவூர்: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் 15 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் இன்று காலை எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். எண்ணெய் கசிவை சரி செய்ய சென்ற அதிகாரிகளை பொது மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து நூற்றுக்கணக்கான போலீசார் கதிராமங்கலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலையில் கசிவு ஏற்பட்ட எண்ணெய் குழாயை பார்வையிட வந்த போலீசாருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாததத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கூட்டத்தை கலைக்க முயன்ற காவல்துறையினர் மக்கள் மீது தடியடி நடத்தினர்.
போலீசார் நடத்திய தடியடியில் பெண் ஒருவரது மண்டை உடைந்தது. 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.