நடுங்க வைத்த இரவு... குன்றத்தூர் டூ வளசரவாக்கம்.. 4 பேர் சேர்ந்து 15 பேரிடம் கொள்ளையடித்த பயங்கரம்!
சென்னை: சென்னை குன்றத்தூர் பைபாஸ் சாலையிலிருந்து வளசரவாக்கம் வரை 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் 15 பேரிடம் துணிகரமாக நடத்திய கொள்ளைச் சம்பவம் சென்னை போலீஸாருக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.
பொதுமக்கள் அத்தனை பேரும் அதிர்ச்சியில் மூழ்கிப் போயுள்ளனர். தங்கு தடையின்றி ஒவ்வொரு ஏரியாவாக இவர்கள் அட்டகாசம் செய்தும் கூட ஒரு இடத்திலும் இவர்களைப் பிடிக்க ஒரு போலீஸாரும் வரவில்லை என்பதுதான் மக்களை அதிர வைத்துள்ளது.
கத்தி முனையில் இவர்கள் பணம், நகை ஆகியவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர். நெடுஞ்சாலையிலும், வீடுகளிலுமாக இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். ஒரு இடத்தில் கூட இவர்களுக்கு எதிர்ப்பு இல்லை என்பதுதான் துயரமானது. புதன்கிழமை இரவுதான் இந்த அட்டகாசம் நடந்துள்ளது.
தாரைப்பாக்கம்
குன்றத்தூர் பைபாஸ் சாலையில் உள்ள தாரைப் பாக்கத்தில் இவர்களது அட்டகாசம் ஆரம்பித்துள்ளது. அங்கு அருண் குமார் என்பவர் தனது மனைவி கவிதாவுடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அவர்களை வழிமறித்த இந்தக் கும்பல் கத்தி முனையில் அவர்களிடமிருந்து ரூ. 3000 பணம், 2 பவுன் தங்கச் சங்கிலி, செல்போன்களைப் பறித்துக் கொண்டது. அப்போது மணி இரவு 11.30 ஆகும்.
தொடர்ந்து வழிப்பறி
இதையடுத்து மாங்காடு, போரூர், காரம்பாக்கம் என தொடர்ந்து வழிப்பறி செய்த அந்தக் கும்பல் கடைசியாக அதிகாலை 1 மணியளவில் வளரசவாக்கத்தில் தனது அட்டகாசத்தை முடித்துக் கொண்டது.
கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் திருட்டு
பெரியப்பன்சேரி என்ற இடத்தில் இவர்கள் கண்ணில் பட்ட நபர்களிடமெல்லாம் திருடியுள்ளனர். கத்தியைக் காட்டி நகை, பணம், செல்போன்களைப் பறித்துள்ளனர்.
அலட்சிய காவல்துறை
பணம், நகை, பொருட்களைப் பறி கொடுத்தர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களை அணுகியபோது அடுத்த நாள் காவலை வந்து புகார் தருமாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாக சொல்கிறார்கள்.
கன்ட்ரோல் ரூம் அலர்ட் செய்யப்பட்டதா?
சம்பந்தப்பட்ட கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போலீஸார் தகவல் கொடுத்து அலர்ட் செய்தனரா என்றும் தெரியவில்லை. ஆனால் போலீஸ் தரப்பில் துரிதகதியில் நடவடிக்கை இல்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.
கொள்ளையர்கள் யார்?
வெறும் நான்கு பேர் வந்து இத்தனை அட்டகாசம் செய்தும் கூட போலீஸாருக்கு அவர்களைப் பற்றிய ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. தற்போது இந்த 4 பேரையும் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.