விவசாயிகளின் பிரச்சினைகள்: மோடியை சந்திக்க திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை: விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரதமரை சந்திக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை மத்திய அரசு கண்டு கொள்ளாததை தொடர்ந்து திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
யார் யார் பங்கேற்பு?
அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
என்ன தீர்மானங்கள்?
குடிநீர் பிரச்சினைக்கு போர்கால அடிப்படையில் தீர்வு காண்பது, மற்ற மாநிலங்கள் தமிழக நதிகளில் தடுப்பணைகள் கட்டுவதைத் தடுப்பது, மதுவிலக்கை அமல்படுத்த கோருவது, விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக பேரவையில் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலாமாக அறிவிக்க வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தமிழகத்தில் கைவிடப்பட வேண்டும்.
நீட்டுக்கு விலக்கு
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க தமிழக பேரவையில் கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பது, விவசாயிகளின் தற்கொலையை தடுப்பது, நெல் , கரும்பு ஆகியவற்றுக்கு உரிய விலையை நிர்ணயிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரை சந்திப்பது என 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
25-இல் வேலை நிறுத்தம்
விவசாயிகள் நலனை வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் 22-ம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.