இந்தியா - பாக். மோதலைப் பயன்படுத்தி வீடு புகுந்து 15 பவுன் நகைகளை திருடிய கொள்ளையன்!
சென்னை: இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்ததைப் பயன்படுத்தி பட்டப் பகலில் வீடு புகுந்த ஒரு திருடன், சென்னையில் 15 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிய ஆட்டத்தை இரு நாட்டு மக்களும், வேலைகளைப் போட்டு விட்டு பார்த்து ரசித்தனர். பெரும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி நடந்த தினமான ஞாயிற்றுக்கிழமையன்று, சென்னையில் சாலைகளில் ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. மால்கள், தியேட்டர்கள், மெரீனா கடற்கரை என எங்கு பார்த்தாலும் வெறிச்சோடிப் போயிருந்தது. மக்கள் டிவி பெட்டிகள் முன்பு முடங்கிப் போய்க் கிடந்தனர்.
கே.கே. நகர் நடேசன் நகரில் வசிக்கும் சாப்ட்வேர் என்ஜீனியரான வத்சன் என்பவரும் தனது வீட்டில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசித்து கொண்டிருந்தார். காற்றோட்டமாக இருப்பதற்கு வசதியாக காலை முதல் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்தார். பின்னர் டிவியில் கிரிக்கெட் போட்டியை ரசித்தார். கடைசி கட்ட ஓவர்களில் இந்த போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருந்தது.
போட்டி முடிந்த பின்னர் எழுந்து அறைக்குள் சென்ற வத்சன், அங்கிருந்த பீரோ திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகளைக் காணவில்லை. இவர் வீட்டுக்குள் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது திறந்து கிடந்த வாசல் வழியாக திருடன் உள்ளே வந்து அருகில் இருந்த சாவியை எடுத்து பீரோவைத் திறந்து நகைகளைத் திருடிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.