மதுரை திருமங்கலத்தில் அதிகாரி வீட்டில் 150 சவரன் நகைக்கொள்ளை
மதுரை: மதுரை அருகே தனியார் நிறுவனத்தின் அதிகாரி வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலத்தில் வசித்து வருபவர் சங்கரன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
இதனை கவனித்த கொள்ளையர்கள் அவரது வீட்டுக்குள் சென்று 150 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். வெளியூர் சென்று திரும்பிய சங்கரன் வீட்டுக்கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசாருடன் வீட்டுக்குள் சென்று பார்வையிட்டபோது 150 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதே பகுதியில் மேலும் இரண்டு வீடுகளில் 3 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள். சில நாட்களுக்கு முன் மதுரையில் கொள்ளைக்கும்பல் ஒன்று நகைக்கடைக்கும் துப்பாக்கியுடன் சென்று கொள்ளையடிக்க முயற்சி செய்தது. இதில் சிலர் கைது ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.