மிரட்டும் டெங்கு: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16 பேர் பலி
டெங்கு காய்ச்சலின் கோர பசிக்கு இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று டெங்கு காய்ச்சலுக்கு 16 பேர்வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் பரவலாக காய்ச்சல் பாதிப்பு 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதே போல் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான வார்டுகள் அனைத்தும் டெங்கு காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. தமிழகத்தில் அக்டோபர் 15ம் தேதி வரை 40 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாகவும், 12,945 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கு இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் 10 வயது சிறுவன் கிருஷ்ணராஜ், திருச்சியை சேர்ந்த கிருத்தியா ஆகியோர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தனர்.
மதுரை பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்த தேவி, திருக்காட்டு பள்ளியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 16 பேர் இன்று டெங்குவின் கோரப்பசிக்கு இரையாகியுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினாலும், டெங்குவிற்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.