16 வயது சிறுவன் ஓட்டிய பைக்கால் விபத்து.. 2 பேர் பலி.. அம்மா மீது வழக்கு!
சென்னையில் நடைபெற்ற சாலைவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video
சென்னை: சென்னையில் இரு சக்கர வாகனம் ஓட்டிய 16 வயது சிறுவன் சாலையில் விபத்தை ஏற்படுத்தியதோடு, தானும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த அயனப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் - மீனா தம்பதியின் 16 வயது மகன் ரோஹித், இவர் வேலம்மாள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் புதன் கிழமை இரவு 7 மணியளவில் ரோஹித் தனது நண்பனுடன் சேர்ந்து அண்ணா நகர் மேற்கு பகுதியில் பைக்கில் அதி வேகத்தில் சென்றுள்ளனர். அப்போது சாலையை கடக்க முயன்ற பாபு என்பவர் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே திருமங்கலத்தைச் சேர்ந்த பாபு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
ரோஹித்துக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றொரு சிறுவனுக்கு கை உடைந்து கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
சிறுவன் ரோஹித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்தி உயிரிழந்த சிறுவன் மற்றும் சிறுவனின் தாய் மீனா ஆகியோர் மீது விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை விளைவித்தல், அதிவேக பயணம், மோட்டர் வாகனச் சட்டம் 180 உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்ட தடை என காவல்துறை எச்சரித்தும், சிறுவர்கள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. செல்லப் பிள்ளைகளுக்கு சந்தைகளில் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் வரும் பைக்குகளை பெற்றோர்கள் எப்பாடு பட்டாவது வாங்கி கொடுப்பதும், அவர்கள் வண்டி ஓட்டும் அழகை பார்த்து பெருமை பொங்க பார்த்து நிற்கும் மனோபாவத்தை முதலில் உடைத்தெறிய வேண்டும்.
அந்த பைக்குகளை பிள்ளைகள் நெரிசல் மிகுந்த சாலைகளில் கூட சாகசம் செய்து உயிரிழக்க நேரிடுகிறது. பிள்ளைகளை பறிகொடுத்ததோடு இல்லாமல் பெற்றோர்கள் குற்றவாளிகளாக நிற்கும் நிலையும் ஏற்படுகிறது. இனியாவது, பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு பைக்குகளை வாங்கி தராமலும், அல்லது, பிறருடைய வாகனங்களை ஓட்ட தடை செய்தாலுமே இத்தகைய இளம்பிஞ்சுகளின் உயிரிழப்பை ஓரளவு தடுக்க முடியும்.