தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 17 பொறியியல், எம்.பி.ஏ கல்லூரிகள் மூடல்!
வருகிற கல்வியாண்டில் 17 பொறியியல் மற்றும் எம்.பி.ஏ கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : தமிழகத்தில் வருகிற கல்வியாண்டில் 17 பொறியியல் மற்றும் எம்.பி.ஏ., கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் பொறியியல் படிப்பின் மீதான ஆர்வல் கடந்த சில வருடங்களாக படிப்படியாக குறைந்து வருகின்றன. ஏற்கனவே பொறியியல் படித்து முடித்த பலர் வேலை இல்லாமல் இருப்பதாலும், குறைந்த சம்பளமே கிடைப்பதாலும் பொறியியல் படிப்பின் மீது மாணவர்கள் ஆர்வம் இன்றி இருக்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை ஆண்டுதோறும் படிப்படியாக குறைந்து வருகின்றன. ஆண்டுதோறும் நடக்கும் பொறியியல் கலந்தாய்வில் முக்கியமான கல்லூரிகளை மட்டுமே மாணவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இதனால் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பொறியியில் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சில தனியார் கல்லூரிகளில் ஒற்றை இலக்க அளவிலேயே மாணவர்கள் சேர்க்கை நடந்திருப்பதால் அக்கல்லூரிகளை வருகின்ற கல்வி ஆண்டில் நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் வருகிற கல்வியாண்டில் 17 பொறியியல் மற்றும் எம்.பி.ஏ கல்லூரிகள் மூடப்பட உள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு 17 கல்லூரிகள் மூடப்பட உள்ளன. அதில் 12 தனியார் மொறியியல் கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.
அதே போல் 5 எம்.பி.ஏ. கல்லூரிகள் வருகிற கல்வி ஆண்டு பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கவில்லை. பாடப்பிரிவுகளுக்கு ஆண்டுதோறும் அனுமதி பெற வேண்டும். கடந்த 21ம் தேதி அங்கீகாரம் பெறுவதற்கு கடைசி நாளாகும்.
அதே நேரம், பொறியியல் கல்லூரிகள் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால், அந்த பாடப்பிரிவுகளையும் மூடுவதற்கு பல கல்லூரிகள் அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளன.