இலங்கை கடற்படையினர் அட்டூழியம் தொடர்கிறது... நாகை மீனவர்கள் 17 பேர் சிறைபிடிப்பு
நாகை: நாகை மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வதும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று கோடியக்கரைக்கு தென்கிழக்கே உள்ள கடல் பகுதியில் நாகை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 17 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மேலும் மீனவர்களின் 2 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேயன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை நேற்றுமுன்தினம் இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், நாகை மீனவர்கள் 17 பேர் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.