கேட்க நாதி இல்லை என்பதற்காக இப்படியா? சிறுமிக்கு உடல் முழுதும் சூடு.. சமையல்காரி சரோஜா கொடூரம்!
மன நலம் பாதித்த சிறுமிக்கு உடல் முழுவதும் சூடு வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: கேட்க நாதி இல்லை என்பதற்காக இப்படியா? ஒரு சிறுமியின் தலை முதல் காலை வரை என உடல் முழுக்க சூடு வைத்திருக்கிறார்கள் மனசாட்சியை அடகுவைத்த சைக்கோ மனித மிருகங்கள். உடலெங்கும் கொப்புளங்களும், காயங்களும், ரணங்களுமாக துடித்து கொண்டிருக்கிறாள் அந்த சிறுமி. அதுமட்டுமல்ல.. அந்த பெண் மன நலம் பாதிக்கப்பட்டவள். அதனால்தான் இந்த செய்தியை ஜீரணிக்கவே முடியவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே ஆலங்கோடு பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் சிஎஸ்ஐ நிர்வாகத்திற்கு சொந்தமான மன நல குன்றிய சிறுவர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் திருநெல்வேலி, நாகர்கோவில், தோவாளை உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 26 மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இங்கு படித்து வருகிறார்கள். அத்துடன். அதே வளாகத்தில் உள்ள காப்பகத்திலும் இந்த பிள்ளைகள் தங்கி வருகின்றனர்.
உடல் முழுதும் தீக்காயம்
இந்த நிலையில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 17 வயது உடைய மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு உடல் முழுவதும் தீக்காயம் உள்ளதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார் சென்றது. இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி குமுதா தலைமையிலான அதிகாரிகள் காப்பகத்துக்கு விரைந்து சென்றனர். கூடவே போலீசார்களும் சென்றனர். அதிரடியாக காப்பகத்தில் நுழைந்த அதிகாரிகளும், போலீசாரும் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
சமையல்காரி சரோஜா
அப்போது 17 வயதுடைய பெண்ணுக்கு உடல் முழுவதும் தீக்காயங்கள் பெருகி வலியால் துடித்து கொண்டிருப்பதை கண்டறிந்தனர். அந்த பெண்ணின் பெயர் தங்கஇசக்கி. இதைக்கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு கிடந்த தங்கஇசக்கியை மருத்துவமனைக்கு கொண்டுசென்று உடனடிபயாக சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த கொடூர காரியத்தை செய்தது சமையல்காரி சரோஜாவாம். காப்பக பிள்ளைகளுக்கு சமைத்து தரும் வேலைக்கு வந்த சரோஜா அங்குள்ள பிள்ளைகள் பலரை இதுபோல் கொடுமைப்படுத்தி வந்துள்ளதும் தெரியவந்தது.
குழந்தைகளை காணோம்
இதையடுத்து, அளித்த புகாரின்பேரில் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சரோஜாவை கைது செய்தனர். அத்துடன், காப்பக நிர்வாகிகள் மற்றும் ஊழியரிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இன்னொரு பகீர் தகவலும் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 26 குழந்தைகளில் 14 குழந்தைகளை காணோமாம்.
சரோஜாவை விடக்கூடாது
இந்த பிள்ளைகள் எல்லோருமே மனவளர்ச்சி குன்றியவர்கள். அவர்கள் இப்போது என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள், இந்த படுபாவிகள் அவர்களை என்ன செய்தார்கள், முதலில் அனைவரும் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா எதுவுமே தெரியவில்லை. மாவட்ட அதிகாரிகளும், மாவட்ட காவல்துறையும்தான் இந்த கொடூரர்களை விசாரித்து இதற்கு ஒரு உடனடி தீர்வு காண வேண்டும். காப்பக ஊழியர்களின் பக்கம் ஒரு சிறு தவறு நடந்திருந்தால்கூட அவர்களை சட்டமும், காவல்துறையும் விட்டுவிடாமல் தண்டனை வழங்கியே தீர வேண்டும். முக்கியமாக சமையல்காரி சரோஜாவுக்கு!