நடிகர் பிரசாந்தின் மாஜி மனைவி கிரகலட்சுமி வீட்டில் 170 சவரன் நகை கொள்ளை
Recommended Video
சென்னை: நடிகர் பிரசாந்த் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டில் 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை மாம்பலத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
சென்னை மாம்பலம் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இவரது மனைவி சிவகாமி சுந்தரி. இவர்களுக்கு பொன்குமார், நாகராஜ் ஆகிய மகன்களும், கிரகலட்சுமி என்ற மகளும் உள்ளனர். கிரகலட்சுமி நடிகர் பிரசாத்தின் மாஜி மனைவியாவார்.
கிரகலட்சுமிக்கும் நடிகர் பிரசாந்த்க்கும் 1.9.2005 ஆம் தேதி இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. 31.7.2006 ஆம் தேதி அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.
முதல் திருமணத்தை மறைத்து தன்னை கிரகலட்சுமி இரண்டாவதாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குடும்பநல நீதிமன்றம் திருமணத்தை செல்லாது என அறிவித்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து கிரகலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். பிரசாந்தின் வழக்கில் கிரகலட்சுமியிடம் இருந்து விவாகரத்து வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது .
இந்த பிரச்சினை ஒருபுறம் இருக்க கிரகலட்சுமியின் அண்ணன் பொன்குமாரின் மனைவி அபிராமி கடந்த 2010ஆம் ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பொன்குமார், நாகராஜ், சிவகாமிசுந்தரி, கிரகலட்சுமி உட்பட 7 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கிரகலட்சுமியின் வீட்டில் இன்று 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை மாம்பலத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து மாம்பலம் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விவாகரத்து, கொலை வழக்கு என நீதிமன்ற படியேறிய கிரகலட்சுமி, இப்போது நகை திருடு போன வழக்கிற்காக காவல்நிலைய படியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.