புதுச்சேரியில் 179 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது: மாநில வளர்ச்சி ஆணையர்
புதுச்சேரியில் 179 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் புயலை எதிர்கொள்வதற்காக 179 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாநில வளர்ச்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவாகியுள்ள நாடா புயல் கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக களத்தில் தயார் நிலையில் உள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாடா புயலை எதிர்கொள்வது தொடர்பாக புதுச்சேரி மாநில அவசர கால செயல் மையத்தில் மாநில வளர்ச்சி ஆணையர் நரேந்திர குமார் தலைமையில் அனைத்து துறை கலந்து கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் காவல் துறை, பொதுப்பணித்துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. கடலுக்கு சென்றிருப்பவர்களும் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே புதுச்சேரியில் 179 புயல் பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநில வளர்ச்சி ஆணையர் நரேந்திர குமார் தெரிவித்தார்.