சென்னையில் திருடனை விரட்டி பிடித்த 'சூர்யா'.. குவிகிறது பாராட்டு.. கமிஷனர் வெகுமதி
நகையை பறித்த திருடனை விரட்டி பிடித்த 17 வயது சிறுவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
Recommended Video
சென்னை: "நகையை பறித்து ஓடிய திருடன் கையில் வைத்திருந்த கத்தியை பற்றியெல்லாம் நான் யோசிக்ககூட இல்லை, திருடனை பிடிப்பதே எனக்கு முக்கியமாக பட்டது" என சொன்ன 17 வயது சிறுவனுக்கு சென்னை மாநகர ஆணையர் உள்ளிட்ட ஏராளமானோரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் அமுதா. இவர் ஒரு மகப்பேறு மருத்துவர். வீட்டின் கீழ்பகுதியிலேயே கிளினிக் ஒன்றினை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாளர் யாரும் இல்லாததால் தனியாளாகவே கவனித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை அமுதா கிளினிக்கில் இருந்தபோது மர்ம நபர் ஒருவர் உள்ளே வந்து, நீங்கள் எந்தெந்த நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அமுதா, நான், கர்ப்பிணிகள் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பேன் என்று பதிலளித்துள்ளார். அப்போது அந்த மர்மநபர் அமுதாவை மிரட்டி சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவர் கழுத்திலிருந்த 10 சவரன் செயினை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார்.
இதனால் அமுதா திருடன்... திருடன் என கத்தி சத்தம்போட, கிளினிக் எதிர்புறம் இருக்கும் கடையில் வேலைபார்க்கும் 17 வயது சிறுவன் சூர்யா, திருடனை விரட்டிக் கொண்டு ஓடினான். கிட்டதட்ட ஒரு கிலோ மீட்டர் வரை துரத்திச் சென்று, திருடனை மடக்கிப் பிடித்த சிறுவன், அவனிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டு வந்து அமுதாவிடம் கொடுத்தார். அத்துடன் அந்த திருடனை காவல்துறையினரிடமும் சூர்யா ஒப்படைத்தான்.
அமுதாவின் கூப்பாடுக்கு பொதுமக்கள் யாரும் உதவாத நிலையில் திருடனை துரத்தி நகையை மீட்ட சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவியத் தொடங்கின.
"திருடனிடம் கத்தி போன்ற ஆயுதம் இருந்து தாக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கேட்டபோது, "பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருக்கும், இல்லையென்றால் உயிரே கூட போயிருக்கலாம், ஆனால் அதையெல்லாம் அந்த நேரத்தில் நான் யோசிக்கவே இல்லை" என சூர்யா பதிலளித்தானாம்.
சிறுவன் சூர்யாவின் இந்த பதிலை செய்திதாள்களில் படித்த சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று நேரில் வரவழைத்து, பாராட்டும் வெகுமதியும் அளித்தார். திருடன் தன்னைத் தாக்க முயன்றபோதும், விரட்டிச்சென்று பிடித்த சிறுவன் சூர்யாவின் மன உறுதி பாராட்டத்தக்கது' என்றார் அவர்.
சூர்யவைபோல் பொதுமக்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் எந்த திருடனும் திருடவே பயப்படுவேன் என்றும், பொதுமக்கள் உதவிகளை செய்ய தைரியமாக முன்வரவேண்டும் என்றும் ஆணையர் கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பேசிய சூர்யா, திருடன் திருடன் என கத்தியும் யாரும் எனக்கு உதவிக்கு வரவில்லை. அடுத்தவர்களுக்கு யாரும் உதவாமல் குற்றங்களை வேடிக்கை பார்ப்பதை பொதுமக்கள் கைவிட வேண்டும் என்றான்.