காணும் பொங்கல்: பாதுகாப்புப் பணிக்கு ஆளில்லா விமானம், 18,000 போலீஸார் பாதுகாப்பு
சென்னை: சென்னையில் ஜனவரி 17ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள காணும் பொங்கலையொட்டி, சுமார் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மெரீனா கடற்கரையில் கண்காணிப்புப் பணியில் ஆளில்லாத விமானத்தை ஈடுபடுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான காணும் பொங்கல் சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னைவாசிகள் கடற்கரை, பூங்கா போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்வது வழக்கம். இதற்காக, சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் மட்டும் 25 பட்டாலியன் போலீஸார், ஆயுதப்படை போலீஸார், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை என சுமார் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மெரீனா கடற்கரை
மெரீனா கடற்கரையில் சுமார் 5 லட்சம் மக்கள் வரை அன்று கூடுவார்கள் என காவல் துறையால் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கடலில் குளிக்க தடை
காணும் பொங்கல் தினத்தன்று கடலில் குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர். கடலுக்குள் யாரும் செல்லாமல் இருப்பதற்கு கட்டைகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதியைக் கண்காணிப்பதற்காக குதிரைப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். மக்களை உஷார்படுத்தும் வகையில், ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
காமராஜர் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மட்டும் 500 போலீஸார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
மாறுவேடத்தில் ரோந்து
காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் போலீஸார் மாறுவேடத்தில் ரோந்து வர உள்ளனர்.
காணும் பொங்கலுக்கு மெரீனாவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதில் திருட்டு, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்களை கண்டறிந்து, கைது செய்வதற்கு மெரீனாவில் மாறுவேடத்தில் போலீஸாரை ரோந்துப் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். குற்றப்பிரிவைச் சேர்ந்த சுமார் 200 போலீஸார் மாறுவேடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளில்லாத விமானம்
இந்த ஆண்டு மெரீனாவை ஆளில்லாத விமானம் மூலம் கண்காணிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம், மெரீனாவுக்கு சந்தேகம்படும் படியான நபர்களையும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவர்களையும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னை முழுவதும்
இதேபோல, எல்லீயட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகியவற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு பணியை 7 இணை ஆணையர்கள், 21 துணை ஆணையர்கள் மேற்பார்வை செய்து வருகின்றனர்.