18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு இறுதி கட்டம்.. வியாழக்கிழமை விசாரணை நிறைவு.. விரைவில் தீர்ப்பு
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை வியாழக்கிழமை நிறைவடைகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என்று தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். இதையடுத்து கொறடா உத்தரவை மீறிய செயல் என்று 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இந்திரா பானர்ஜி, சபாநாயகர் நடவடிக்கையில் தலையிட முடியாது என தீர்ப்பளித்தார். நீதிபதி சுந்தரோ, சபாநாயகர் நடவடிக்கை செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை, 3வது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட சத்யநாராயணாவிடம் வழங்கப்பட்டது.
டிடிவி தினகரன் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் மோகன் பராசரன், ராமன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டு வருகிறார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது அதிமுக என்ற கட்சியே இல்லை. தேர்தல் ஆணையத்தில் அதுதொடர்பான வழக்கு அப்போது நிலுவையில் இருந்தது. எனவே சபாநாயகர் நடவடிக்கை இயற்கை நீதிக்கு எதிரானது என்று வாதிட்டனர்.
சபாநாயகர் தரப்பில் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டு வருகிறார். முதல்வரை மாற்ற ஆளுநரிடம் மனு அளித்தது தவறான செயல் என அவர் வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர், வைத்தியநாதன் வாதிட்டார். வாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், வியாழக்கிழமை இறுதிகட்ட விசாரணை நடக்கிறது. அன்றுடன் விசாரணை நிறைவடைகிறது. தீர்ப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.