18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிங்க - ஹைகோர்ட்டில் மனு
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை விரைந்து விசாரிக்க தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
டி.டி.வி தினகரனை ஆதரித்த 18 அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டது. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு முடிவடையாமல் நீடித்து வருகிறது. தீர்ப்பை விரைந்து வழங்க வேண்டும் அல்லது இடைத் தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று தேவராஜன் என்பவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்வதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்தார். ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளாக செயல்பட்டு வந்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் எடப்பாடி பழனிச்சாமி.
கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 21ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தன. அன்று மாலையே, அப்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து, அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள்.
மேலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்றவேண்டும் எனவும், ஒ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக சபாநாயகர் தனபாலுவை முதல்வராக நியமிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த நிலையில், கட்சி தலைமைக்கு எதிராக எம்எல்ஏக்கள் இணைந்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்து தவறு, தமிழக அரசின் தலைமை கொறடா என்ற முறையில் என்னிடம் தான் முதலில் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல், நேரடியாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது கட்சிக்கு விரோதமானது என்று சபாநாயகரிடம் கூறினார் கொறாடா.
ஜக்கையன் மட்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். அதையடுத்து, மற்ற 18 பேரையும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ், சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதற்கு எதிராக 18 எம்.எல்.ஏக்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கின் விசாரணை கடந்த நவம்பர் முதல் உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதியன்று அனைத்து தரப்பினரும் அவர்களுடைய எழுத்துபூர்வமான வாதத்தைத் தாக்கல் செய்தனர். டி.டி.வி.தினகரன் அணி எம்எல்ஏக்கள் சார்பில், நாங்கள் வேறு எந்த அணிக்கும் தாவவில்லை. முதல்வரை மட்டுமே மாற்றக் கோரினோம். எங்கள்மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
கட்சிக்குள் உள்ள பிரச்னையைச் செயற்குழு பொதுக்குழுவில் பேசித் தீர்க்காமல் ஆளுநரிடம் கொண்டு செல்லப்பட்டது தவறு. எனவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் விளக்கமளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.
இதனிடையே தேவராஜன் என்பவர், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கை விரைந்து விசாரித்த தீர்ப்பளிக்க வேண்டும். அல்லது இடைத் தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.