சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது.. நீதிபதி சுந்தர் அளித்த பரபர தீர்ப்பின் முழு விவரம்
Recommended Video
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், சபாநாயகர் எடுத்த முடிவு தவறானது என்று ஆணித்தரமாக தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார் நீதிபதி எம்.சுந்தர்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் முதல்வரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர்களை பதவி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து 18 பேர் சார்பில தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஹைகோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், மற்றொரு நீதிபதியான எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
மாறுபட்ட தீர்ப்பு
இந்திரா பானர்ஜி, சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என கூறி, அவர் உத்தரவு தொடரும் என தீர்ப்பளித்தார். ஆனால் சுந்தர் சபாநாயகர் உத்தரவு தவறானது என்று தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, 3வது நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கிய பிறகே, இந்த வழக்கில் தீர்வு கிடைக்கும்.
சுந்தர் வேறு தீர்ப்பு
இதனிடையே நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் என்ன தெரிவித்தார் என்ற முழு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சுந்தர் கூறியதாவது: தலைமை நீதிபதியின் உத்தரவில் இருந்து, இந்த வழக்கில் நான் மாறுப்பட்டு தீர்ப்பு அளிக்கிறேன். சபாநாயகரின் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது. முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது.
அரசியமைப்பு சட்டத்திற்கு எதிரானது
மனுதாரர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனடிப்படையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு அவசியமாகிறது. இதேபோன்ற பிரச்னையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா வழக்கை நான் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் ஆளுனரை சந்தித்து மனு கொடுத்ததை அடிப்படையாக கொண்டு கட்சி தாவலாக நடவடிக்கை எடுத்ததை ஏற்க முடியாது.
ஒரே மாதிரி இல்லை
ஆளுநரை சந்தித்த 19 எம்எல்ஏக்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கவில்லை. 18 பேருக்கு ஒரு முடிவும், அவர்களில் பின்னர் அரசுக்கு ஆதரவு தெரிவித்த எஸ்.டி.கே.ஜக்கையனுக்கு ஒரு முடிவும் எடுத்துள்ளார் சபாநாயகர். மனுதாரர்களுக்கு அவர்களின் தரப்பு விளக்கங்களைக் கொடுக்க சட்டசபை தலைவர் உரிய வாய்ப்புகளைத் தரவில்லை. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது தெளிவாகிறது. அரசியலமைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, சபாநாயகருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மட்டுமே. அதை குலைத்துவிடக் கூடாது.
சபாநாயகர் உத்தரவு ரத்து
இந்த காரணங்களுக்காக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது, செல்லாது.
இவ்வாறு நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கு மூன்றாவது ஒரு நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளதால், அந்த மூன்றாவது நீதிபதி யார் என்பதை சென்னை உயர் நீதிமன்ற சீனியர் நீதிபதியான குலுவாடி ஜி. ரமேஷ் முடிவு செய்வார்.