18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது சரியே...அரசு தரப்பு வாதம்
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே என்று அரசு தரப்பு வாதம் செய்தது. இந்த வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். இதையடுத்து கொறடா உத்தரவை மீறிய செயல் என்று 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கு 3-ஆவது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட சத்யநாராயணாவிடம் வந்தது.
இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் கொறடா தரப்பு வாதம் இன்று நடைபெற்றது. அப்போது 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சரியே என்று அரசு கொறடா தரப்பு வாதம் செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி. நாளை மறுநாள் முதல் மீண்டும் அனைத்து தரப்பும் வாதத்தை விளக்க உள்ளனர்.