18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு.. ஹைகோர்ட் 3வது நீதிபதி முன்னிலையில் நாளை விசாரணை! தப்புமா பதவி?
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர். சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்ற தலைமை நீதிபதி அவரது உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தார்.
3வது நீதிபதிக்கு மாற்றம்
ஆனால் மற்றொரு நீதிபதியான எம் சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தார். நீதிபதிகளின் இருவேறு மாறுபட்ட தீர்ப்பால் வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
விமலா நீக்கம்
நீதிபதி எஸ்.விமலா, இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால் இதனை எதிர்த்து தினகரன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து 3வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.
நாளை மீண்டும் விசாரணை
இந்நிலையில் இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நேற்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் தலைமை பதிவாளரிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
புயலை கிளப்புமா?
மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளார். வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்க உள்ளதால் 18 எம்எல்ஏக்களின் பதவி தப்புமா அல்லது தமிழக அரசியலில் புயலை கிளப்புமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.