ஹைகோர்ட் உத்தரவுகள்... எடப்பாடி பழனிச்சாமிக்கு நல்ல செய்தியா? கெட்ட செய்தியா?
18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு நல்ல செய்தியா? கெட்ட செய்தியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகர் தனபால் உத்தரவிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி மறுத்து விட்டார்
சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்தது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு நல்ல செய்திதான் என்றாலும், 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை நிச்சயம் மகிழ்ச்சியை தந்திருக்காது என்றே சொல்ல வேண்டும்.
அதே போல மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது எனவும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு கெட்ட செய்திதான்.
19 பேர் போர்க்கொடி
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்றக் கோரியும், தமிழக சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரியும், ஆளுநரிடம் டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் மனு கொடுத்தனர்.
இதையடுத்து, அவர்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
Recommended Video
சபாநாயகர் நோட்டீஸ்
ஆளுநரிடம் மனு அளித்த 19 எம்எல்ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு நிலையை எடுத்த ஜக்கையன் மட்டும் நேரில் ஆஜராகி, விளக்கம் அளித்தார்.
18 பேர் தகுதி நீக்கம்
மற்றவர்கள் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், பேரவைத் தலைவர் தனபால், திடீரென்று நேற்று முன்தினம் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும், சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கு இன்று நீதிபதி துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பு தடை நீடிப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதி துரைசாமி, மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தடை நீட்டிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.
தடை விதிக்க மறுப்பு
இறுதி கட்ட வாதத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது எனவும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி துரைசாமி.
நல்ல செய்திதான்... ஆனா
18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது நல்ல செய்திதான். ஆனால் உடனே இடைத்தேர்தல் நடத்த தடை விதித்துள்ளது நீதிமன்றம். அதேபோல சட்டசபையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உயர்நீதிமன்றம் செக் வைத்துள்ளது.
தினகரன் தரப்பு சோகம்
சபாநாயகரின் தகுதிநீக்க உத்தரவுக்கு தடை பெற்று விடலாம் என்றும் எம்எல்ஏக்களாக சட்டசபைக்குள் நுழையலாம் என்றும் நம்பிக்கொண்டிருந்த தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரும் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுக்கு உள்ள ஒரே ஆறுதல் இப்போதைக்கு இடைத்தேர்தல் வராது என்பதுதான்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தார் ஸ்டாலின். ஆனால் தினகரன் தரப்பு எம்எல்ஏக்களின் வழக்கினால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது நல்ல செய்தியா கெட்ட செய்தியா எப்படி ரியாக்ட் செய்வது என்று யோசிக்கின்றனர் திமுகவினர்.