ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தவறான சிகிச்சை.. 18 வயது மாணவர் மரணம்
ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 18 வயதான கல்லூரி மாணவர் மரணமடைந்துள்ளார்.
சென்னை: ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் புற்றுநோய் பாதிக்கப்பட்ட 18 வயதான கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிள்ளிவளவன். இவருக்கு 19 வயதில் கிருஷ்ணன் என்ற மகன் இருந்தார். கல்லூரி மாணவரான இவருக்கு வலது காலில் புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்தது. நோயின் தொந்தரவு காரணமாக அவதிப்பட்ட கிருஷ்ணன், கடந்த 2015 ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி சென்னை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவனைக்கு வந்துள்ளார்.
ஓராண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டால் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தி விடலாம் என்று கிருஷ்ணனுக்கும் அவரது பெற்றோருக்கும் மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர். இதனை நம்பி கடந்த ஓராண்டு காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் கிருஷ்ணன்.
இந்நிலையில், கிருஷ்ணன் திடீரென மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார். அவருக்கு கிமோ தெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சையை, மெடிக்கல் ஆன்காலஜி மற்றும் சர்ஜிக்கல் ஆன்காலஜி துறை மருத்துவர்கள் முறையாக வழங்கவில்லை என்றும் அறுவை சிகிச்சைக்கு முன்பு கொடுக்க வேண்டிய சிகிச்சையை அறுவை சிகிச்சைக்கு பின்னர் கொடுக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 18 வயதே நிரம்பிய கல்லூரி மாணவர் ஒருவர் தவறான சிகிச்சை காரணமாக இப்படி பரிதாபமாக இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.