வெளிநாட்டுக்கு ரூ.424 கோடி பணம் அனுப்பிய 19 போலி நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு
வெளிநாட்டுக்கு ரூ.424 கோடியை அனுப்பி வைத்த விவகாரம் தொடர்பாக சென்னையை சேர்ந்த 19 போலி நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து உள்ளது.
சென்னை: வெளிநாடுகளுக்கு போலி நிறுவனங்கள் மூலம் 700 முறை 424 கோடி ரூபாய் பணம் அனுப்பிய சென்னையைச் சேர்ந்த சேர்ந்த 19 போலி நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து உள்ளது.
சென்னை தங்கசாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 19 நிறுவனங்களின் பெயரில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை நடப்பு கணக்குகள் தொடங்கப்பட்டன. இவற்றில் ரூ.424 கோடி டெபாசிட் செய்யப்பட்டது.
பின்னர் இந்த தொகை வர்த்தக நடவடிக்கைக்கு முன்பணமாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதில் எந்த உண்மையான வர்த்தக நடவடிக்கையும் நடைபெறவில்லை என்று சிபிஐக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து சட்டவிரோத முறையில் பண மோசடி நடந்திருப்பதாக கூறி இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பாக சனிக்கிழமையன்று சிபிஐ சென்னையை சேர்ந்த 19 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பாக சிபிஐ தரப்பில் கூறப்படுவதாவது:
2015ஆம் ஆண்டு சென்னை தங்க சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையின் அடையாளம் காணப்படாத அதிகாரிகள் சிலர் தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்த 19 நிறுவனங்களுடன் இணைந்து குற்றச் சதியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிறுவனங்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைக்கு முன்பணமாக ஹாங்காங்கில் உள்ள ஒரு வங்கிக்கு ரூ.424 கோடியை அனுப்பி வைத்துள்ளன. இதற்காக 700 முறை பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. அதுவும் 100 சதவீத தொகையை முன்பணமாக அனுப்பி உள்ளன.
ஜனவரி 2015 முதல் மே 2015 வரை 700 பண பரிமாற்றங்கள் மூலம் 424.58 கோடி ரூபாய் கருப்பு பணம் எச்எஸ்பிசி வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல சிறிய வங்கிகளுக்கு பணப் பரிமாற்றம் போலி நிறுவனங்கள் பெயரில் நடந்துள்ளன என சிபிஐ தெரிவித்துள்ளது.
முன்பணம் அனைத்தும் நியூயார்க்கின் எச்எஸ்பிசி வங்கியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் நோஸ்ட்ரோ கணக்கு மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் கொடுக்கப்பட்ட முகவரியில் நிறுவனங்களின் எந்த கிளையும் செயல்படவில்லை என்பதை வங்கி பின்னர் கண்டறிந்தது.
மேலும் பணவரவு பெற்றவர்கள் அனைவரும் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கி மூலம் பணத்தை பெற்றுள்ளது தெரியவந்தது. இந்த கூட்டுறவு வங்கிகளில் பல பெயர்களில் போலி கணக்குகள் துவங்கப்பட்டு அவற்றிக்கு நியூயார்க்கில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் இருந்து பணம் பெறப்பட்டது என சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்த மோசடியால் இந்திய கறுப்பு பணம் 424.58 கோடி ரூபாய் வெள்ளைப் பணமாக இந்தியாவுக்கு திரும்பியதாக சிபிஐ தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளது.
உண்மையில் இதுபோன்ற வர்த்தக நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை. பணத்தை வெளிநாட்டுக்கு மோசடியாக அனுப்பும் நோக்கத்திற்காகவே இந்த நிறுவனங்களின் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் 19 நிறுவனங்களும் போலியாக இருக்கலாம் என்று சிபிஐ சந்தேகம் தெரிவித்து இருக்கிறது.