வங்கியில் 19 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்து ஹோட்டல் அதிபரான கொள்ளையன் கைது
புதுக்கோட்டை: கீரனூர் அருகே குளத்தூரில் உள்ள தனியார் வங்கியில் 19 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்து உள்ள குளத்தூரில் இருக்கும் தனியார் வங்கிக்குள் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் லாக்கரில் இருந்த நகைகளை மூட்டைகளாக கட்டி எடுத்துச் சென்றனர். நகை மூட்டைகளுடன் சென்ற கொள்ளையர்களை இரவு நேர ரோந்து பணியில் இருந்த போலீசார் பார்த்து துரத்தினர்.
அப்போது கொள்ளையர்கள் ஒரு மூட்டையை மட்டும் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற மூட்டையில் 31 கிலோ தங்க நகைகள் இருந்தது. ஆனால் அவர்கள் 19 கிலோ தங்க நகைகளுடன் ஓடிவிட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள தனியார் வங்கியில் சிலர் கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் அடித்ததால் தாங்கள் கொண்டு வந்த கட்டிங்பிளேடு, ஆக்சாபிளேடு உள்ளிட்ட பொருட்களை போட்டிவிட்டு ஓடிவிட்டனர்.
அந்த பொருட்கள் திருச்சி பாலக்கரையில் உள்ள கடை ஒன்றில் வாங்கப்பட்டதை கண்டுபிடித்த நத்தம் போலீசார் இது குறித்து திருச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நத்தம் போலீசார் திருச்சி போலீசாருடன் சேர்ந்து அந்த கடைக்கு சென்று விசாரணை நடத்தியதுடன் மீண்டும் யாராவது அதே பொருட்கள் வாங்க வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் கீரனூர் அருகே உள்ள ஒடுக்கூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(38) திருச்சி பாலக்கரையில் உள்ள அந்த கடைக்கு சென்று கட்டிங்பிளேடு, ஆக்சாபிளேடு உள்ளிட்டவற்றை கேட்டுள்ளார். கடைக்காரர் உடனே திருச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து வந்து கோபாலகிருஷ்ணனை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் நத்தத்தில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதுடன், கீரனூர் அருகே உள்ள குளத்தூரில் இருக்கும் தனியார் வங்கியில் 19 கிலோ தங்கநகைகளை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து திருச்சி போலீசார் அவரை கீரனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கீரனூர் போலீசார் விசாரித்தபோது, கொள்ளையடித்த நகைகளை விற்று அவர் ரூ.2 கோடியில் சொகுசு பங்களா கட்டியதுடன் ஹோட்டல் நடத்தி வருவதும், 4 கார்கள் வாங்கியதும் தெரிய வந்துள்ளது. கோபாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரின் கார் ஒன்றை பறிமுதல் செய்தனர்.