தனியார் பேருந்தின் மீது தாறுமாறாக மோதிய அரசுப் பேருந்து - 19 பயணிகள் படுகாயம்!
முசிறி: முசிறி அருகே அரசுப் பேருந்து ஒன்று தனியார் பேருந்தின் மேல் மோதிய விபத்தில் 19 பயணிகள் படுகாயமடைந்தனர்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலத்துக்கு இன்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் முசிறி அருகே உள்ள செவந்திலிங்கபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் பின்னர் முன்னால் திருச்சியில் இருந்து நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சின் பின் பகுதியில் பயங்கரமாக மோதி நின்றது.
இதில் இரு பஸ்களிலும் பயணம் செய்த விராலிமலையை சேர்ந்த சகுந்தலா, நடராஜன், பார்த்தசாரதி, திருச்சியை சேர்ந்த விஷ்னு, வினோத்குமார், அரியலூரை சேர்ந்த அகிலா, சிவரஞ்சினி, மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்த கல்பனா, அரியமங்கலம் இளங்கோவன், தாராநல்லூர் நட்ராயன், அரசு பஸ் டிரைவரான திருச்சியை சேர்ந்த பார்த்திபன் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற முசிறி இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.