தொடங்கியது அதிமுக செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம்
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடை பெற்று வருகிறது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும் கூட்டி விவாதிக்க வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிகளும் ஆண்டுதோறும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது வழக்கம். அந்த வகையில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள சூழலில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி வருகின்றன.
அதன்படி, அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் இன்று மாலை 3 மணிக்கு துவங்கியுள்ளது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப் பட்டுள்ளது. மேலும், சில சிறப்பு அழைப்பாளர்களாக சிலருக்கும் அழைப்பிதழ் அனுப்பப் பட்டுள்ளது.
அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்திற்குள் அனுமதிக்கப் படுவார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இக்கூட்டத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
இக் கூட்டத்தில், தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் நிலைப்பாடு குறித்தும் நிர்வாகிகள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா விளக்கி பேசுகிறார்.
தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கவும், தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறித்து ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்கவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.