இரட்டை இலையை இழந்து 1989ல் அதிமுக சந்தித்த முதல் தேர்தல்.. பிளாஷ்பேக்!
சென்னை: அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலை 1989ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக முடக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி தனது பலத்தை நிரூபித்தது.
அதிமுகவை நிறுவியவரான எம்.ஜி.ஆர். 1987ம் ஆண்டு மறைவடைந்தார். இதையடுத்து அதிமுக உடைந்தது. ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையில் இன்னொரு அணியுமாக பிளந்தது.
இந்த நிலையில் 1989ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலை பிளவுபட்ட அதிமுக சந்தித்தது. அதில் ஜானகி அணிக்கு இரட்டைப் புறா சின்னமும், ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னமும் கிடைத்தது.
வென்றார் ஜெயலலிதா
இரு பிரிவினரும் தேர்தலில் முட்டி மோதினர். இதில் வென்றது ஜெயலலிதாதான் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி 27 இடங்களில் வெற்றி பெற்று 2வது இடத்தைப் பெற்றது. திமுக ஆட்சியைப் பிடித்தது. ஜானகி அணிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை ஜானகியே படு தோல்வி அடைந்தார்.
ஆண்டிப்பட்டியில் ஜானகி தோல்வி
ஆண்டிப்பட்டியில் ஜானகி தோல்வியுற்றார். அதேசமயம், ஜெயலலிதா போடிநாயக்கனூர் தொகுதியில் அபார வெற்றி பெற்றார். இத்தேர்தலில் தனது பலத்தையும், தான்தான் அதிமுக என்பதையும் ஜெயலலிதா நிரூபித்தார்.
27 இடங்களில் ஜெ. அணி வெற்றி
1989 சட்டசபைத் தேர்தலில் திமுக 150 இடங்களில் வென்றது. ஜெயலலிதா அணிக்கு 27 இடங்களில் வெற்றி கிடைத்தது. 175 இடங்களில் போட்டியிட்ட ஜானகி அணி படு தோல்வி அடைந்தது. அக்கட்சியுடன் கூட்டணி வைத்த நடிகர் சிவாஜி கணேசனின் கட்சியும் போட்டியிட்ட 49 இடங்களிலும் கேவலமாக தோற்றது.
மீண்டும் திரும்பிய இரட்டை இலை
இந்தத் தேர்தலுக்குப் பின்னர் ஜானகி அரசியலை விட்டு விலகினார். எம்.ஜி.ஆரின் வாரிசாக அவர் ஜெயலலிதாவை அறிவித்து, ஏற்றுக் கொண்டார். இதனால் அதிமுக ஜெயலலிதா வசம் வந்தது. முடக்கப்பட்ட இரட்டை இலையும் மீண்டும் துளிர்த்தது.
மீண்டும் ஒரு முடக்கம்
அதன் பின்னர் 1989 முதல் தற்போது வரை இரட்டை இலை தமிழகத்தின் அத்தனை தேர்தல்களிலும் வலம் வந்தது. இடையில் ஜெயலலிதாவுக்கும் அது தோல்வியைக் கொடுத்தாலும் கூட தடையற இருந்து வந்தது. தற்போது மீண்டும் ஒரு முடக்கத்தை சந்தித்துள்ளது.