கன்னத்தில் அறைந்த திண்டுக்கல் ஆசிரியர்.. அரளி விதை அரைத்து குடித்த 2 மாணவிகள்.. தொடரும் சிகிச்சை
ஆசிரியை அடித்ததால் 2 மாணவிகள் விஷம் குடித்தனர்.
Recommended Video
திண்டுக்கல்: ஆசிரியர் திட்டிவிட்டார் என்பதற்காக 2 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்கள் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் கொடைரோடு மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டோல்கேட் அருகே உள்ள பகுதி கொழிஞ்சிப்பட்டி. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வருபவர் கவுசல்யா, மற்றும் அங்காளஈஸ்வரி.
கன்னத்தில் அடித்தார்
இவர்கள் இருவரும் 10-ம் வகுப்பு மாணவிகள். 10-ம் வகுப்புக்கு நடத்தப்பட்ட வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் இவர்கள் இருவரும் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளனர். இதனால் அவர்களின் தமிழ் ஆசிரியர் மாணவிகளை வன்மையாக திட்டியதுடன், கன்னத்தில் அறைந்துள்ளார்.
அரளிவிதை சாப்பிட்டனர்
இதனால் மாணவிகள் இருவரும் மனம் நொந்து போயினர். வகுப்புக்குள்ளே நீண்ட நேரம் உட்கார்ந்து அழுதனர். மற்ற மாணவிகள் முன்பு கன்னத்தில் அறைந்ததால் அவமானமும் அடைந்தனர். அதனால் உயிரை போக்கிக் கொள்ள முடிவெடுத்த இருவரும் காட்டு பகுதிக்கு சென்று அங்கிருந்த அரளி விரையை அரைத்து சாப்பிட்டனர்.
சாலை ஓரம் மாணவிகள்
பெண் பிள்ளைகள் இருவரும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் தேடி வந்தனர். அப்போது இரு மாணவிகளும் சாலை ஓரத்தில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்த பெற்றோர், அவர்களை உடனடியாக கொடைரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விசாரணை ஆரம்பம்
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காட்டுத் தீயென பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி நிர்வாகம் பள்ளியிலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடமும் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.