திருச்சி: ஷூவில் 2.5 கிலோ தங்கம் கடத்திய நபர் கைது
ஷூவுக்குள் வைத்து 2.5 கிலோ தங்கத்தை கடத்தி வந்த நபரை திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.
மலேசியாவில் இருந்து இன்று காலை விமானம் ஒன்று திருச்சி விமான நிலையம் வந்தது. அப்போது, வழக்கம் போல் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பயணி ஒருவரின் நடையை பார்த்து சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர் போட்டிருந்த ஷூவை சோதனை செய்தனர்.
அதனுள் 2.5 கிலோ தங்க பிஸ்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கம் விலை உயர்வு, தங்க இறக்குமதிக்கு வரி உயர்வு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களினால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
திருச்சி விமான நிலையத்தில் மட்டும் கடந்த 3 நாட்களில் 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.