கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது.. 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்
கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை: புளியரை வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து புளியரை வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக நெல்லை காவல் கண்காணிப்பாளர் விக்ரமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசியில் இருந்து கேரளாவுக்கு சென்ற அரசு பேருந்தில் இன்று சோதனை நடத்தப்பட்டது. அதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷிபு என்பவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல ஆரியங்காவு சோதனை சாவடியில் அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில் கொட்டாரக்கரை பேருந்தில் பயணம் செய்த வினு என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நூதன முறையில் காலில் 500 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இருவரிடம் இருந்தும் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவி்ததுள்ளனர். தமிழகத்தில் புளியங்குடி, கம்பம், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து தொடர்ந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படுவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.