தேனி அருகே காருக்குள் போதை பொருட்களை கடத்திய கல்லூரி மாணவர் உள்ளிட்ட 2 பேர் கைது
தேனி: காரில் ரூ.3 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை கடத்தி வந்த 2 பேரை தேவதானப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
தேவதானப்பட்டி காட்ரோடு பகுதியில் போலீசார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது காரில் இருந்தவர்கள் முறையான பதிலை தெரிவிக்காததால் சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனை நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு போதை பொருட்கள் அங்கிருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அவர்கள் விருதுநகர் மாவட்டம் அள்ளம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி 35, அஜய் 22 என்பதும், திருவண்ணாமலையில் இருந்து கம்பத்திற்கு போதை பொருட்களை விற்பதற்காக கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
இதில் அஜய் ஒரு கல்லூரி மாணவர் என்றும் இதேபோல் பல ஊர்களுக்கு போதைப்பொருட்களை விற்று வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதுடன், காருக்குள் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.