நெல்லையில் ப்ளஸ் 2 விடைத்தாள்கள் எரிப்பு: மாவட்ட கல்வி அதிகாரி டிரான்ஸ்பர்
நெல்லை: ப்ளஸ் டூ தேர்வுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நெல்லையில் விடைத்தாள்கள் மர்மமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கஸ்தூரி பாய் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 6 மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்த பள்ளிதான் தேர்வு மையமாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்தாண்டு முதல் விடைத்தாள்களில் மாணவர்களின் புகைப்படமும் அச்சிடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் 5ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பள்ளியில் உள்ள புதிய கட்டட அறையில் விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திடீரென அந்த அறையில் ஏற்பட்ட தீயால் விடைத்தாள்கள் எரிந்து சாம்பலானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. எனினும் பள்ளியில் புதிய கட்டடமாக இருப்பதால் அதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பள்ளி நிர்வாகம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக ஒரு தரப்பினர் விடைத்தாள்களை தீ வைத்து எரித்து விட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விடைத்தாள்கள் எரிந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது. தற்போதுதான் இந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. இதனை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விடைத்தாள்கள் எரிந்தது தொடர்பாக கல்வித்துறைக்கு தகவல் கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், உடனடியாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கஸ்தூரி பாயை பணியிடை மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
ப்ளஸ் டூ தேர்வுக்கு முன்பாகவே விடைத்தாள்கள் எரிக்கப்பட்ட சம்பவம், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.