ஒட்டன்சத்திரம் அருகே மயில்களை வேட்டையாடி நெருப்பில் சுட்டு சாப்பிட்ட 2 பேர் கைது
மயில்களை சுட்டு சாப்பிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே மயில்களை தீயில் சுட்டு சாப்பிட்ட 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேசியப் பறவையான மயிலை பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். மயிலை வேட்டையாடுதல், மாமிசத்தை உண்பது உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்குமே 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும். ஆனாலும் தமிழகத்தின் சில வனப்பகுதிகளில் மான், மயில் போன்றவைகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் உடல் வீரியத்திற்காக இந்த விலங்குகள் மற்றும் பறவையின் இறைச்சிகள் சாப்பிடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் முயல், மயில், மான், போன்றகள் கொல்லப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்த வண்ணம் இருந்தது. அதனால் சின்னக்காம்பட்டி பகுதியில் அய்யலுார் வனத்துறை சிறப்பு குழுவினர் தேடுல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது 60 வயது மதிக்கத்தக்க 2 பேர் நாட்டு துப்பாக்கியால் மயிலை சுட்டு, வனப்பகுதியிலேயே தீ மூட்டி நெருப்பில் வாட்டி அதன் இறைச்சியை சாப்பிட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை கையும் களவுமாக பிடித்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இவர்கள் இருவரும் சின்னக்காம்பட்டியை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி, பாபு என்பது தெரியவந்தது. பழனிச்சாமி ஒட்டன்சத்திரத்தில் பைனான்ஸ் நடத்தி வரும் தொழிலதிபர் என்பதும், மயிலை வேட்டையாடி சுட்டு தருவதற்காக பாபு என்பவரை உடன் அழைத்து வந்ததாகவும் விசாரணையில் வெளிவந்தது.
இதனையடுத்து, மயில்களை சுடுவதற்காக வைத்திருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் அங்கிருந்த மயில் இறைச்சியை வனத்துறையினர் கைப்பற்றி ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.