தமிழக பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் 2 பேர் கைது!
பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்
சென்னை: தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி கிழக்கு முகப்பேரை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் கணேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், மதிப்பெண்களை தவறாக பதிவிட்ட டேட்டா என்ட்ரி ஆப்ரேடர் ஷேக் தாவூத் நாசரை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர் தாமாகவே முன்வந்து பொன்னேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இவர்கள் இருவரும் அளித்த தகவலின் பேரில் மேலும் இருவர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையும் இடையில் மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்ட நாதன் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த நாதனையும் அவனின் உதவியாளரான சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பரமசிவம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள போலீசார், இந்த முறைகேட்டில் பல உயர்கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகளும், கல்வித்துறையை சேர்ந்தவர்களும் சிக்குவார்கள் என்று எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.