கேரளாவிலிருந்து மீன் கழிவுகளை ஏற்றிக் கொண்டு தமிழகம் வரும் லாரிகள்: 2 பேர் கைது
செங்கோட்டை : கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மீன், கோழி கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்து தமிழக எல்லையில் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. நேற்று புளியரை வழியாக வந்த லாரியை போலீசார் திருப்பி அனுப்பியதால் லாரியை தமிழக எல்லையில் விட்டுவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். குமரி மாவட்டத்தில் கோழி, மீன் கழிவுகளை கொட்ட வந்த லாரி டிரைவர் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக கேரளா எல்லைப்பகுதியான செங்கோட்டை புளியரை வழியாக தினமும் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரளமாநிலத்திற்கும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்க்கும் வருகின்றன. அடிக்கடி கேரளாவில் இருந்து தமிழகத்திற்க்குள் வரும் காலியான சரக்கு வாகன ஓட்டுனர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அம்மாநிலத்தில் இருந்து புழுக்கள் நெளியும் மீன்,கோழி,உள்ளிட்ட பல்வேறு கழிவு களை ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டி செல்லும் நிலை கடந்த சிலமாதங்களாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை கேரளாவில் இருந்து புளியரை போலீஸ் வாகன சோதனை சாவடியை கடந்து ஒரு லாரி வேகமாக வந்தது. அதனை உதவி ஆய்வாளர் துரை மற்றும் போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது அந்த லாரியில் கேரளாவில் இருந்து இராட்சச மீன்களின் தலைகள் மற்றும் அதன் கழிவுகள் இருந்ததைக் கண்டு உடனடியாக லாரியை கேரளாவை நோக்கி திருப்பி அனுப்பினர்.
லாரி ஓட்டுனர் லாரியை திருப்பி கேரளாவுக்கு கொண்டு செல்வது போல் சென்று எஸ் வளைவு பகுதியில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து புளியரை போலீசார் அதில் இருந்த ஆவணங்களை வைத்து லாரி உரிமையாளரையும், ஓட்டுனரையும் தேடி வருகின்றனர்.
மீன் கழிவுலாரியில் இருந்து வழியும் கெட்ட நீரால் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சபரிமலை நோக்கி வாகனங்களில் செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கழிவுகள்
கேரளாவில் இருந்து கோழி இறைச்சி மற்றும் மீன் கழிவுகள் வாகனங்கள் மூலம் குமரி மாவட்டத்திற்கு ஏற்றி வரப்படுகின்றன. இந்த லாரிகளை தடுத்து நிறுத்துவதற்காக களியக்காவிளை சோதனை சாவடியில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த லாரிகள் பெரும்பாலும் அதிகாலையில்தான் எல்லை தாண்டி வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று காலை ஒரு லாரி மீன் கழிவுகளுடன் கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் நோக்கி வந்தது. அந்த லாரியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் இதை பார்த்த பொதுமக்கள் களியக்காவிளை சோதனை சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, சோதனை சாவடியில் இருந்த போலீசார் தடுப்பு ஏற்படுத்தி அந்த லாரியை நிறுத்த முயன்றனர்.
தப்பி சென்ற லாரி
சோதனை தடுப்பை கண்டதும் டிரைவர் வேகமாக அந்த லாரியை இயக்கியதால் தடுப்புகளை உடைத்துக்கொண்டு லாரி மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. உடனே, களியக்காவிளை சோதனை சாவடி போலீசார், இந்த தகவலை படந்தாலுமூடு சோதனை சாவடி போலீசாருக்கு தெரிவித்துவிட்டு, அந்த லாரியை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்றனர்.
விரட்டிய போலீசார்
படந்தாலுமூடு சோதனை சாவடியில் பெரிய கட்டைகளை போட்டு அந்த லாரியை தடுக்க முயன்றனர். ஆனால், அந்த தடுப்புகளையும் இடித்து தள்ளிக்கொண்டு லாரி முன்னேறியது. இதனால், படந்தாலுமூடு போலீசாரும் அந்த லாரியை விரட்டி சென்றனர். சினிமாவில் வருவது போல் நடந்த இந்த சம்பவத்தால், அந்த வழியாக சாலையில் சென்ற மற்ற வாகனங்கள் ஓரங்கட்டி நிறுத்தப்பட்டன.
இந்தநிலையில் மீன்கழிவு லாரி திருத்துவபுரம் சந்திப்பில் சென்ற போது, ஒரு வேன் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதற்கிடையே லாரியில் இருந்த டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.
2 பேர் கைது
அப்போது, அந்த லாரியை பின்தொடர்ந்து வந்த ஒரு சொகுசுகார் லாரி டிரைவரை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றது. உடனே, களியக்காவிளை போலீசார் அந்த காரை சிறிது தூரம் விரட்டி சென்று மடக்கி, அதில் இருந்த லாரி டிரைவர் உள்பட 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது டிரைவர் பெயர் முத்து மற்றும் எபனேசர் என்றும், இருவரும் பணக்குடியை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.