ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த 2 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி பரிதாப பலி
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிந்தனர்.
தர்மபுரி: ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் குளித்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிந்தனர். ஈமச்சடங்கு நடத்த வந்த நடத்தில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள பகுதிகளிலும் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் குடும்பம் உறவினர்களுடன் ஈம சடங்கு செய்வதற்காக ஒகேனக்கல்லுக்கு வந்திருந்தனர். காவிரி ஆற்றில் அவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது நீச்சல் தெரியாத 2 சிறுமிகள் ஆழமான பகுதிக்கு குளிக்கச் சென்றதால் தண்ணீரில் மூழ்கினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்க முயன்றனர். அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கி காணமால் போனதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அப்பகுதியில் 2 மணிநேர தேடுதலுக்கு பிறகு சிறுமிகளின் உடல்களை மீட்டனர். ஈமச் சடங்கு நடத்த வந்த இடத்தில் இரண்டு சிறுமிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.