வேலூர்: நோய்வாய்ப்பட்ட பன்றி இறைச்சி சாப்பிட்ட 2 சிறுவர்கள் மரணம்
வேலூர்: வேலூரில் பன்றி இறைச்சி சாப்பிட்ட 2 சிறுவர்கள் மரணமடைந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சின்ன இளையநகரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். அவரது வீட்டில் அடிக்கடி பன்றி இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிடுவர். நேற்று முன்தினம் பன்றி இறைச்சியை சிவக்குமார் வாங்கி வந்தார்.
அதை அவரது வீட்டில் சமைத்தனர். பின்னர் கணவன் மனைவி மகன்கள் கதிர்வேல் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து ஆசை ஆசையாக சாப்பிட்டனர்.
இந்த நிலையில் சிறுவர்களான கதிர்வேல் மற்றும் கோகுலுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. ஆனால் சிவக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. 2 சிறுவர்களும் இரவு முழுவதும் வாந்தி எடுத்தனர்.
இதனால் உடல் நிலை மோசமாகவே குழந்தைகள் 2 பேரையும் சிவக்குமாரும் அவரது மனைவியும் வேலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று கதிர்வேல் கோகுல் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே இறந்த 2 சிறுவர்களின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே சிறுவர்களின் சாவுக்கு என்ன காரணம் என்பது தெரியவரும்.
எனினும் பன்றி இறைச்சியை சிவக்குமார் யாரிடம் இருந்து வாங்கினார் என்றும் நோய் வாய்ப்பட்ட பன்றியை கூறுபோட்டு இறைச்சிக்கடைக்காரர் விற்றாரா என்பது குறித்தும் முதல்கட்டமாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதன்படி இறைச்சி விற்றவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.