ரோஜா ரோஜா.. குளுகுளு ஊட்டியில் 16வது ரோஜா கண்காட்சி.. 30,000 மலர்களில் பிரமாண்ட இந்தியா கேட்!
ஊட்டியில் 2 நாள் ரோஜா கண்காட்சி இன்று துவங்கியது.
Recommended Video
ஊட்டி: சுற்றுலா பயணிகளை கவரும் புகழ்பெற்ற ஊட்டி ரோஜா கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்கியது.
2 நாள் நடைபெறும் இந்த கண்காட்சியினை மாவட்ட தோட்ட கலை துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணிய சாம்ராஜ் முன்னிலையில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜுணன், மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் வருகிறது. இதையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் மலர் கண்காட்சி சர்வதேச அளவில் புகழ் பெற்றது. கடந்த 1980-ம் ஆண்டு முதல் தமிழக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
ஊட்டி விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ளது ரோஜா பூங்கா. 4.40 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. 4 ஆயிரம் ரகங்களை சேர்ந்த 38 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1995-ம் ஆண்டு மே மாதம் 100-வது மலர் கண்காட்சி பூங்காவில் நடைபெற்றது. முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
"ஜெயலலிதா ரோஜா செடி"
நூற்றாண்டு நிகழ்ச்சியன்று மறைந்த ஜெயலலிதா தனது கையாலேயே ஒரு ரோஜா செடியை பூங்காவின் நுழைவுவாயில் நட்டு வைத்தார். அந்த செடிக்கு ஜெயலலிதா என்று பெயரிடப்பட்டது. அந்த செடி நன்கு வளர்ந்து இன்றும் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இதுதவிர வெளி நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ரோஜா செடிகளும் காணப்படுகின்றன. உலக ரோஜா சம்மேளனம் கடந்த 2006-ம் ஆண்டு விசேஷ ரோஜா மலர்கள் மற்றும் இந்தியாவிலேயே சிறந்த பூங்காவுக்கான விருதை ஊட்டி ரோஜா பூங்காவுக்கு வழங்கியது.
பிரமாண்ட இந்தியா கேட்
இன்று மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த இந்த ரோஜா மலர் கண்காட்சியில், சுமார் 30 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு பிரமாண்டமான உருவத்தில் இந்தியா கேட் உருவமும், சோட்டா பீம் உருவமும் அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி, மதுரை, ஈரோடு, திருவண்ணாமலை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் தோட்டக் கலைதுறை சார்பில் மலர்களிலான படகு, ஜல்லிக்கட்டு காளை மற்றும் மயில் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில் 53 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
கவரும் பச்சை ரோஜாக்கள்
ரோஜாக்களை சிவப்பு, ரோஸ், மஞ்சள், வெள்ளை நிறங்களில் பார்த்திருப்போம். ஆனால், இந்த பூங்காவில், பச்சை நிறத்தில் உள்ள ரோஜாவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இலையும், பூவும் ஒரே நிறத்தில் காணப்படுவதால் அதனை காண அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். மேலும் பன்னீர் ரோஜா, பட்டன் ரோஸ் மற்றும் நீலம், சிவப்பு, வெள்ளை, மஞ்சள் உள்பட பல்வேறு நிறங்களில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
செல்பி எடுத்து மகிழ்ச்சி
ஊட்டியில் சீசன் துவங்கியுள்ளதால் நகரமே களை கட்டியுள்ளது. எங்கு பார்த்தாலும் மனித தலைகள் நடமாட்டம் இருப்பதை காண முடிந்தது. ரோஜா பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா மலர்களை கண்டு ரசிப்பதோடு, புதுவித மலர்களையெல்லாம் புகைப்படங்களாக எடுத்து கொள்கின்றனர். அத்துடன் ரோஜா மலர்களின் அருகில் நின்று செல்பிகளையும் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.