நான் ‘சைன்’ போடலைன்னா ஜெ.உடலை அடக்கம் செய்திருக்கவே முடியாது..அமைச்சரின் அதிர்ச்சி பேச்சு
தாம் கையெழுத்து போடாவிட்டால் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடலை அடக்கம் செய்திருக்க முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா உடலை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்ய தாம்தான் முதல் கையெழுத்து போட்டேன்; அப்படி கையெழுத்து போடவில்லை எனில் ஜெயலலிதா உடலை மெரினாவில் அடக்கம் செய்திருக்க முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அடக்கம் செய்வதற்கு அரசின் அனுமதி அவசியம்.
செய்தித் துறை வசம்
தலைவர்களின் நினைவிடங்களை பாதுகாக்கும் பொறுப்பு தமிழக அரசின் செய்திதுறை வசம்தான் உள்ளது. அந்த அடிப்படையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்ய அத்துறையின் அமைச்சர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த வகையில், ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்வதற்கான அனுமதியை செய்திதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
பிஆர் ஓ முகாம்
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பி.ஆர்.ஓ.க்களுக்கு சென்னையில் 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த புத்தாக்கப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பி.ஆர்.ஓக்கள் சென்னை வந்தனர். இந்த வகுப்பில் இனி வரும் நாட்களில் பி.ஆர்.ஓக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
நான் தான் காரணம்...
இந்த பயிற்சி முகாமில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அப்போது ஜெயலலிதா உடலை எம்.ஜி.ஆர். நினைவிடத்தினுள்ளே அடக்கம் செய்யும் கோப்பில் நான்தான் முதலில் கையெழுத்துப் போட்டேன். நான் கையெழுத்து போடவில்லை என்றால் அடக்கம் செய்திருக்க முடியாது " என ஒரு பெரிய குண்டை பி.ஆர்.ஓக்கள் பயிற்சி முகாமில் வீசினார்.
புதிய கட்டளை
அதைக் கேட்ட பி.ஆர்.ஓ.க்களுக்கு கடும் அதிர்ச்சி. என்னமோ இவர் மனது வைத்ததினால்தான் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இடம் கிடைத்தது மாதிரி பேசுகிறாரே? இதெல்லாம் ரொம்ப ஓவர் என பயிற்சி அரங்கத்திலேயே பலரும் முணுமுணுத்தனர். இது தவிர, அரசு விழாக்களுக்கு எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களையும் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களையும் கூப்பிடக்கூடாது என்றும் பி.ஆர்.ஓ.க்களுக்கு கண்டிப்புடன் உத்தரவு போட்டார் அமைச்சர் கடம்பூர் ராஜு.