வேலூர்: ஏசி வெடித்த விபத்து- தீயில் கருகிய நால்வரில் 3 பேர் பலி
வேலூர்: வேலூர் கஸ்பா பகுதியில் ஏசி வெடித்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாநகராட்சி 52வது வார்டுக்கு உட்பட்ட கஸ்பா அடவனந்தாங்கல் ஏரி தெருவைச் சேர்ந்தவர் வாஹித்கான்(50). ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி நூர்ஜான் (45), மகள்கள் ஷாஹிஸ்தா (19), ஷாஜியா(11). ஒருவர் கல்லூரியில் பட்டப்படிப்பும், மற்றொருவர் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் தளத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
ஞாயிறு இரவு வழக்கம்போல 4 பேரும் ஏசி வசதி செய்யப்பட்ட பெட்ரூமில் தூங்கினர். அதிகாலை 5 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் ஏசி வெடித்து சிதறியது. இதனால் தூக்கத்தில் இருந்து அலறி எழுந்த 4 பேரும் கூச்சலிட்டனர்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஓட்டல் உரிமையாளரின் 2வது மகள் ஷாஜியா தீக்காயங்களுடன் வெளியே வந்தார். அதற்குள் தீ மளமள என அறை முழுவதும் பரவியது. இவர்கள் அனைவரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டனர்.
தீக்காயம் அடைந்த 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் நூர்ஜான் பரிதாபமாக இறந்தார். சிறிது நேரம் கழித்து ஷாஹிஸ்தா உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி வாஹித்கானும் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஷாதியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே கேட் மூடியதால் தாமதம்
விபத்து பற்றி தகவலறிந்ததும் வேலூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அப்போது கஸ்பா பகுதியில் ரயில் வந்ததால் கேட் மூடப்பட்டது. இதனால் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாமல் சுமார் 15 நிமிடம் அங்கேயே நின்று விட்டு தாமதமாக சென்றது. அதற்குள் வீட்டில் இருந்த கட்டில், மெத்தை, மின்சாதன பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
ஆபத்தாகும் மின்சாதனங்கள்
கடந்த வாரம் விழுப்புரம் அருகே பிரிட்ஜ் வெடித்து மூன்று பேர் உயிரிழந்தனர். ஞாயிறன்று ஏ.சி வெடித்து 2 பேர் உயிரினை காவு வாங்கியுள்ளது. மின்சாதனங்கள் சவுகரியத்தை தருவதற்குப் பதில் சங்கடங்களை ஏற்படுத்துவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.