கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவி-எம்எல்ஏ அபூபக்கர் திறந்து வைத்தார்
கடையநல்லூரில் 2 டயாலிஸிஸ் மிஷின்கள் திறந்துவைக்கப்பட்டன.
கடையநல்லூர்: சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கரின் தீவிர முயற்சியினால், கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் இரண்டு தொழில் நுட்பங்களுடன் கூடிய ரத்த சுத்திகரிப்பு கருவிகள் நேற்று திறந்து வைக்கப்பட்டன.
கடையநல்லூர் பகுதிகளில் சிறுநீரக நோயாளர்களின் இரத்தம் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால் சிறுநீரக நோயாளர்கள் தமது இரத்தத்தை சுத்திகரிப்பதற்காக தென்காசி மற்றும் திருநெல்வேலி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று வந்தனர்.
கடையநல்லூரில் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கரின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் அரசு சுகாதார துறை சார்பில் ரூ.14.40 லட்சம் செலவில் தொழில்நுட்பங்களுடன்கூடிய இரண்டு டயாலிஸிஸ் கருவிகள் வாங்கப்பட்டன. அதனை நோயாளிகளின் பயன்பாட்டுக்கு சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் நேற்று திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் இளங்கோவன், நாள் ஒன்றிற்கு 4 சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இந்த நிலையத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதில் மருத்துவர்கள் தங்கச்சாமி, மீனாட்சி, நகராட்சி ஆணையர் பவுன்ராஜ், பொரியாளர் ரெஜினா மற்றும் முஸ்லிம்லீக் நிர்வாகிகள் நெல்லை மஜீத், செய்து சுலைமான், இக்பால், அப்துல் லத்தீம், உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.