உளுந்தூர்பேட்டையில் கார் டயர் வெடித்து விபத்து.. இருவர் பலி.. ஒருவர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையின் ஓரமாக இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து ஒரு கார் திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. காரை சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முருகவேல் ஓட்டி சென்றார்.
அந்த காரில் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த ஜோதிடர் சாய்பாலாஜி மற்றும் அவரது உறவினர் சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த மருத்துவர் சுந்தரராமன் ஆகியோர் பயணம் செய்தனர்.
போலி கணக்கு தொடங்கி போலீஸ் பெயரிலேயே கைவரிசை.. ஷாக் ஆன டிஎஸ்பி, எஸ்ஐ !
உளுந்தூர்பேட்டை
இந்த கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்து சிதறியது. இதனால் தாறுமாறாக தறிகெட்டு ஓடிய கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
அப்பளம் போல் நொறுங்கிய கார்
இதில் காரின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற முருகவேல், காரில் பயணம் செய்த ஜோதிடர் சாய்பாலாஜி ஆகிய இருவரும் உடல் நசுங்கி அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
மேலும் காரில் பயணம் செய்த சுந்தரராமன் படுகாயம் அடைந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
காயமடைந்த சுந்தரராமன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.