கொடைக்கானலில் போதைக் காளான்களை அதிகளவில் சாப்பிட்ட 2 கேரள மாணவர்கள் பலி.. சுற்றுலா வந்தபோது பரிதாபம்
கொடைக்கானலில் தனியார் விடுதியில் தங்கி அதிகளவில் போதை காளான்களை சாப்பிட்ட கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா வந்த இடத்தில் அதிகளவில் போதைக்காளான் சாப்பிட்ட கேரள மாணவர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரளா மாநிலம் ஆழப்புலாவைச் சேர்ந்த மாணவர்கள் 13 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சுற்றுலா வந்துள்ளனர். வட்டக்கானல் பகுதிக்குச் செல்லும் வழியில் போலீஸ் சோதனை சாவடி அருகே ஒரு தனியார் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அம்மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே கஞ்சா மற்றும் போதைக் காளான்களை அதிக அளவில் உபயோகித்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், இன்று காலை அம்மாணவர்களில் இரண்டு பேர் அளவுக்கு அதிகமான போதைப் பொருள் எடுத்துக் கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த மாணவர்களின் பெயர் தாமஸ் (21) மற்றும் ஜிபின் (25) ஆகும். இதேபோல், அணில் (21), மெல்வின் (21) மற்றும் பினு (21) ஆகிய மூன்று மாணவர்கள் ஆபத்தான நிலையில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலர் கொடைக்கானல் நகரில் பல இடங்களில் தங்கி அனுமதி இல்லாமல் விடுதிகளை நடத்தி கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்களை போதைகளுக்கு அடிமையாக்கி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு உள்ளது.
நகராட்சி நிர்வாகமும் கொடைக்கானல் காவல்துறையினரும் இணைந்து போதைக் களமாக மாறி வரும் கொடைக்கானலையும் இங்கே வரும் இளைஞர்களையும் காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் போதைக் காளானுக்கு உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.