கேரளாவை புரட்டிப்போட்ட ஓகி புயல்.. 2 பேரிடர் மீட்புக்குழுக்கள் கொச்சின் விரைவு!
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு 2 பேரிடர் மீட்புக்குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
Recommended Video
அரக்கோணம்: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு 2 பேரிடர் மீட்புக்குழுக்கள் விரைந்துள்ளன.
வங்கக்கடலில் உருவான ஓகி புயல் தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவை சின்னாபின்னாக்கியுள்ளது. கரையை கடக்காமல் சென்றபோதே பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது ஓகி புயல்.
ஓகி புயல் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு கேரள அரசுக்கு சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கமுடியாமல் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
150 கிமீ வேகத்தில் காற்று
திருவனந்தபுரம் கடற்பகுதியில் 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள் சேதமடைந்துள்ளன. மின்கம்பங்களும் விழுந்துள்ளதால் பெரும்பாலா இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
பல இடங்களில் வெள்ளம்
கனமழையால் கேரள மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
ஊருக்குள் புகுந்த கடல்நீர்
பலத்த காற்று மற்றும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பு காரணமாக கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்துள்ளது.
கேரளாவில் 5 பேர் பலி
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகியுள்ளனர். இதுவரை கேரள மாநிலத்தில் ஓகி புயலுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.
2 பேரிடர் மீட்புக்குழுக்கள் விரைவு
இந்நிலையில் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி விமானப்படை தளத்தில் இருந்து 2 பேரிடர் மீட்புக்குழுக்கள் கேரளாவுக்கு விரைந்துள்ளது. 60 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழுவினர் சாலை மார்க்கமாக கொச்சின் செல்கின்றனர்.