திருச்சி, கும்பகோணத்தில் 2 விவசாயிகள் மரணம்- கருகிய சம்பா பயிர்களைக் கண்டு மாரடைப்பு
கருகிய சம்பா பயிர்களைக் கண்டு திருச்சி, கும்பகோணத்தில் இரண்டு விவசாயிகள் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் சம்பா பயிர் சாகுபடி செய்திருந்தார் விவசாயி மைக்கேல். தண்ணீரின்றி பயிர்கள் கருகுவதைக் கண்டு மன உளைச்சலில் இருந்த மைக்கேல் இன்று காலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
கும்பகோணம் அருகே அணைக்கரை அருகே மணக்குள்ளத்தில் நெஞ்சு வழியால் பெண் விவசாயி உயிரிழந்தார். 2 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி கீர்த்திகா மரணமடைந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்தாண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான 3 மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 50 டிஎம்சி தண்ணீரை தரவில்லை. இதனால், டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்க முடியாமல் போனது.
இந்நிலையில் சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து முதலில் 15 ஆயிரம் கன அடியும், அடுத்து 6 ஆயிரம் கன அடியும், கடைசியாக 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் தமிழகத்திற்கு திறக்க உச்சநீதிமன்ற உத்தரவுகளில் அடுத்தடுத்து தெரிவிக்கப்பட்டது.
காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடி ஆண்டு தோறும் ஆகஸ்ட் 1ம் தேதி சம்பா சாகுபடி துவங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சம்பா சாகுபடி பொய்த்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு சம்பா சாகுபடியை விவசாயிகள் தொடங்குவதற்கு வசதியாக கடந்த செப்டம்பர் 20ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதை நம்பி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட டெல்டா பகுதிகளில் விவசாயிகள் 18 லட்சம் ஏக்கரில் நேரடி நெற்பயிர் விதைப்பில் ஈடுபட்டனர். விவசாயிகள் தற்கொலை தமிழக அரசு அறிவித்தபடி, 62 நாட்களுக்கு மேலாகியும் மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு சென்றடையவில்லை. இதனால், தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் விதைத்த நெற்பயிர்கள் கருக தொடங்கியது.
பயிர்கள் கருகியதால் விவசாயிகள் மரணமடைவதும், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. இன்று கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காவிரி டெல்டா மாவட்டங்களில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.