மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கி காசிமேடு மீனவர்கள் 2 பேர் மாயம்
ராயபுரம்: சென்னை காசிமேடு பகுதியிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு ஒன்று மூழ்கிய விபத்தில் காணமல் போன 2 மீனவர்களை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.
காசிமேடு சிங்காரவேலன் நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கு சொந்தமான விசைப் படகில் காசிமேட்டைச் சேர்ந்த சரவணன், தைராஜு, ராஜா, முரளி, விஜி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மாமல்லபுரம் திருவிடந்தை என்ற இடத்தில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் விசைப்படகு பழுதானது. சிறிது நேரத்தில் படகு கடலில் மூழ்க தொடங்கியது. உடனே படகில் இருந்த 5 பேரும் கடலில் குதித்தனர். இவர்களில் ராஜா, முரளி, விஜி ஆகியோர் நீந்தி கரை திரும்ப முயன்றனர்.
கிட்டதட்ட 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கோவளம் மீனவர்கள் வந்த விசைப்படகு அங்கு வந்தது. அந்த படகில் அவர்கள் ஏறி நேற்று மதியம் கரை சேர்ந்தனர். ஆனால் சரவணன், தைராஜு ஆகியோர் கதி என்ன என்று தெரியவில்லை. உயிர் தப்பிய 3 பேரும் இதுகுறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காசிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதுகுறித்து உயிர் தப்பிய மீனவர்கள், "படகு மூழ்கியதும் நாங்கள் கடலில் குதித்தோம். எங்கும் இருள் சூழ்ந்து இருந்தது. கரை எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. அலை செல்லும் திசை நோக்கி சுமார் 2 மணி நேரம் நீந்தினோம். அப்போது ஒரு விசைப்படகில் வந்தவர்கள் எங்களை மீட்டனர். கடவுள் அருளால் நாங்கள் உயிர் தப்பினோம்.
எங்களுடன் வந்த சரவணன், இன்னொரு படகில் ஏறியதை பார்த்தோம். ஆனால் ஏன் அவர் கரை திரும்பவில்லை என்று தெரியவில்லை. தைராஜு என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளனர். மாயமான 2 பேரை கடலோர காவல்படையினர் தேடி வருகிறார்கள்.