மதுரை: கன மழையால் வீட்டின் கூரை இடிந்து 2 சிறுமிகள் பலி, இருவர் காயம்
மதுரை: மதுரை அருகே அவனியாபுரத்தில் பெய்த கனமழையால் வீட்டின் கூரை இடிந்து விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்தார்.
இதேபோல் மதுரை சின்ன உடைப்பு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 வயது சிறுமி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள பாப்பனோடை கிராமத்தை சேர்ந்தவர் முருகன், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி. இவருக்கு இருள்சாமி (வயது11), அருள்பாண்டி (9), அய்யனார் (5) என்ற 3 மகன்கள் உள்ளனர். ஒரே மகள் மோகனாதேவி (8) 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
புதன்கிழமை இரவு முருகன், ராணி தம்பதியர் தங்கள் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கினார்கள். இவரது வீடு கூரை வீடாகும். இந்த கூரை இன்று அதிகாலை 4 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளுக்குள் முருகன் குடும்பத்தினர் சிக்கிக் கொண்டனர்.
அவர்களது கூக்குரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.
சிறுமி பலி, 2 பேர் காயம்
இருப்பினும் கூரை விழுந்து அமுக்கியதில் சிறுமி மோகனா தேவி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். காயம் அடைந்த முருகன் மற்றும் ராணி சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணை
சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் முருகனின் பக்கத்து வீட்டு சுவர் கடந்த 2 நாட்கள் பெய்த மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இடிந்து முருகன் வீட்டு கூரை மீது விழுந்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
2 வயது சிறுமி உயிரிழப்பு
இதேபோல் மதுரை அருகே சின்ன உடைப்பு என்ற பகுதியில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
மதுரையில் தொடரும் மழை
மதுரை நகரும், சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மதுரையில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதன்கிழமை காலை முதல் மாலை வரை மதுரையில் மேகமூட்டமாக காணப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இந்த மழையால் நிலத்தடி நீர் உயரும் நிலையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணை நீர்மட்டம் உயர்வு
முல்லைபெரியாறு அணைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்துள்ளது. அணையில் 111.04 அடியாக இருந்த நீரின் அளவு 3 அடி உயர்ந்து 114.04 அடியாக உயர்ந்துள்ளது.அணைக்கு வரும் நீரின் அளவு 1, 535 கன அடியிலிருந்து 6, 649 கன அடியாக உயர்ந்துள்ளது. அதே போல் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 250 கன அடியில இருந்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அணைப்பகுதியில் 28 மி.மீ அளவிலும், தேக்கடியில் 51 மி.மீ அளவிலும் மழை அளவு பதிவாகியுள்ளது.
வைகை அணை
வைகை அணையின் நீர்மட்டம் 21.06 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 52 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 40 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.
ராஜபாளையத்தில் வெள்ளம்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ராஜபாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மழை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அய்யனார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.